‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகும் நிலையில், இப்படம் உலக அளவில் எத்தனை கோடி வசூலித்துள்ளது,  என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். இப்படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் 2-ம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

பான் இந்தியா திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும், தொடர்ந்து நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய விதம் அருமையாக இருக்கிறது என்று, தொடர்ந்து அனைத்து தரப்பினரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ரசிகர்கள் பலர் பாகுபலி திரைப்படத்தையே மணிரத்னத்தின் ‘பொன்னின் செல்வன்’ விஞ்சி விட்டதாக பெருமை பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மூன்று நாட்களே ஆகும் நிலையில், தற்போது இப்படம், உலக அளவில் 150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகமாகும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்