U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மாலை நடக்கும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

நடப்பு தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் உள்ளது. ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது.

இதற்டையில் அணியில் உள்ள சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

எனினும், இந்த பின்னடைவை இந்திய ஜூனியர் அணி சிறப்பாகவே கையாண்டு இருந்தது. குறிப்பாக நிஷாந்த் சிந்து தலைமையிலான அணி அயர்லாந்து அணியை 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தொடர்ந்து உகாண்டாவிற்கு எதிரான ஆட்டத்திலும், பிறகு நடந்த காலிறுதி ஆட்டத்திலும் மிகச் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்தது. காலிறுதியில் நடப்பு சாம்பியனான வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்தியா அந்த அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, அரையிறுதியில் நுழைந்துள்ளது.

இந்திய அணியில் ஹர்னூர் சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் ராஜ் பாவா ஆகிய இளம் வீரர்கள் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் ரவிக்குமார், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கி ஓஸ்ட்வால் மற்றும் கௌஷல் தம்பே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

2 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணி அதன் காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. “இந்தியா நல்ல ஃபார்மில் உள்ளது. இருப்பினும், எங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவோம்” என்று ஆஸ்திரேலிய ஜூனியர் அணியின் கேப்டன் கூப்பர் கோனோலி கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் யாஷ் துள் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “ஆஸ்திரேலிய பந்துவீச்சு தாக்குதல் வழக்கமான ஒன்றுதான். ஆனால், நாங்கள் விரைவான விக்கெட்டுகளை இழந்தவுடன் பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். டெத் ஓவர்களில் அதிக ரன்களை குவிப்பதற்காக பார்ட்னர்ஷிப்களை கட்டியெழுப்புவதில் எங்கள் கவனத்தை திருப்பியுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். இந்தப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும். தொடர்ந்து 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்புடன் இந்தியா உள்ளது